அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் விநியோகிக்கும் வர்த்தகர்கள் தங்களது வாகனத்தில் விலைப்பட்டியலை காட்சிப் படுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பயணத்தடையின் காரணமாக மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் பிரிவுகள் தோறும் நடமாடும் சேவை மூலம் வழங்குவதற்கு நடமாடும் வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடமாடும் சேவை மூலம் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வோர் பொருட்களுக்கான விலையினை காட்சிப்படுத்தாது கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக பொது மக்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளதாக கூறினார்.
இதையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் ஆலோசனைக்கமைய பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சாலிய பண்டார தலைமையில் பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டு நடமாடும் சேவை மூலம் அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டதோடு, பொருட்களுக்கான நாளாந்த விலைப்பட்டியல் வாகனத்தில் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
நடமாடும் சேவை மூலம் பொருட்களை விற்பனை செய்வோர் தத்தமது வாகனத்தில் விலைப் பட்டியலை காட்சிப்படுத்தாதவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு, அவர்களுக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
(ஒலுவில் விசேட நிருபர்)
No comments:
Post a Comment