தற்போது மக்கள் செயற்படும் விதத்தால் நாம் எதிர்பார்க்கும் இறுதி முடிவுகள் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது : கவலை தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ சங்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

தற்போது மக்கள் செயற்படும் விதத்தால் நாம் எதிர்பார்க்கும் இறுதி முடிவுகள் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது : கவலை தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ சங்கம்

(எம்.மனோசித்ரா)

கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. தற்போது மக்கள் செயற்படும் விதம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளின் ஊடாக நாம் எதிர்பார்க்கும் இறுதி முடிவுகள் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குனரத்ன தெரிவித்தார்.

இலங்கை மருத்துவ சங்கத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், தற்போது நாட்டில் நாளாந்தம் அறிவிக்கப்படும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் அவை உண்மையில் இடம்பெற்ற காலத்திற்கும் இடையில் சுமார் 3 வாரங்கள் அல்லது ஒரு மாத இடைவெளி காணப்படுகிறது. மே மாதம் இடம்பெற்ற மரணங்களே தற்போது அறிவிக்கப்படுகின்றன.

எனவே கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் திருப்தியளிக்கக் கூடியவையாக இல்லை என்பதை இலங்கை மருத்துவ சங்கம் என்ற அடிப்படையில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

காரணம் தற்போது மக்கள் செயற்படும் விதம் போக்குவரத்து கட்டுப்பாடுகளின் ஊடாக நாம் எதிர்பார்க்கும் இறுதி முடிவுகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ள போதிலும் பெருமளவான வாகனங்கள் வீதிகளில் செல்கின்றன. மக்கள் சாதாரணமாக நடமாடும் சூழலை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடுகளின் போது, இயன்றவரை அதன் விதிகளுக்கு மதிப்பளித்து சகலரும் செயற்பட வேண்டும்.

அத்தோடு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரித்தல், தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்களை சமூகத்திலிருந்து வேறுபடுத்தல் மற்றும் தொற்றாளர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குதல் என்பவற்றிலும் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

14 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்துவதா அல்லது தொடர்ந்தும் நீடிப்பதா என்பதை தற்போது யாராலும் தீர்மானிக்க முடியாது. இன்று நாட்டில் காணப்படும் நிலைமையை அவதானிக்கும் போது, வைத்தியசாலைகளில் பெருமளவான தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமூகத்திலிருந்து பெருமளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

எனவே 7 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கு எடுத்த தீர்மானம் மிக முக்கியத்துவமுடையதும், காலத்திற்கு ஏற்றதுமாகும். எனினும் 14 ஆம் திகதியும் பொறுத்தமான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment