(எம்.மனோசித்ரா)
உரப் பற்றாக்குறை மற்றும் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை மையப்படுத்தி கிராமிய மட்டத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கட்சி உறுப்பினர்களுடன் இன்று வியாழக்கிழமை கலந்துரையாடிபோதே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் கிராமிய மட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுங்கள்.
விவசாயிகளின் பிரச்சினை பெரும் விடயமாக எழுச்சி கண்டுள்ளது. அரசாங்கத்திடம் எவ்விதமான தீர்வு திட்டமும் இல்லை. எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சியின் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமைதாங்க வேண்டும்.
அதேபோன்று எதிர்காலத்தில் அரசியலுக்கு பிரவேசிக்க விரும்புகின்றவர்களையும் இதில் இணைத்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment