அஸ்ராசெனிகா கிடைக்காவிடின் மாற்றுத் தடுப்பூசிகளை ஏற்றுவதால் எந்தவொரு தீங்கும் உடலுக்கு ஏற்படாது என்பது ஆய்வுகளில் உறுதி என்கிறது தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Friday, June 4, 2021

அஸ்ராசெனிகா கிடைக்காவிடின் மாற்றுத் தடுப்பூசிகளை ஏற்றுவதால் எந்தவொரு தீங்கும் உடலுக்கு ஏற்படாது என்பது ஆய்வுகளில் உறுதி என்கிறது தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு

(ஆர்.யசி)

ஆறு இலட்சம் பேருக்கான அஸ்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியாது போனால், முதலாம் கட்டத்தில் அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக ஸ்புட்னிக் அல்லது ஜோன்சன் அன் ஜோன்சன் தடுப்பூசியை ஏற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், மாற்றுத் தடுப்பூசிகள் ஏற்றுவதனால் எந்தவொரு தீங்கும் உடலுக்கு ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களில் ஆறு இலட்சம் பேருக்கு இன்னமும் இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மாற்றுத் தடுப்பூசி பெற்றுக் கொடுப்பதா அல்லது ஒரு தடுப்பூசியுடன் நிறுத்துவதா என்பதில் பாரிய குழப்பமொன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாற்றுத் தடுப்பூசி ஏற்றுவது குறித்து நேற்று முன்தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பொன்றை விடுத்திருந்த நிலையில், இது குறித்த ஆய்வுகளை முன்னெடுக்கும் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேனவிடம் வினவியபோது அவர் கூறியதானது,

அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக அதே தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நாம் தொடர்ச்சியாக வெளிநாடுகளிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். அரசாங்கம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் இன்னமும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. 

ஏனெனில் சகல நாடுகளுமே வைரஸ் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் எம்மைப்போன்றே அவர்களும் தமது மக்களுக்கான பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துகின்றனர், எனவே அவர்கள் எமக்கான தடுப்பூசிகளை வழங்க மறுக்கின்றனர் என கருதுகின்றோம். 

எவ்வாறு இருப்பினும் நாம் மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டியுள்ளது. ஆகவே அஸ்ராசெனிகா தடுப்பூசியை எம்மால் பெற்றுக் கொள்ள முடியாது போனால் முதலாம் தடுப்பூசியாக அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களுக்கு மாற்றுத் தடுப்பூசியாக ஸ்புட்னிக் அல்லது ஜோன்சன் அன் ஜோன்சன் தடுப்பூசியை ஏற்றுவது சாதகமானதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தடுப்பூசிகளும் அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஒத்ததாகும். ஆகவே இவற்றை ஏற்றுவதால் உடலுக்கு எந்தவித தீங்கும் அல்லது பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

கடந்த சில மாதங்களாக நாம் இது குறித்து அதிக கவனம் செலுத்தி ஆய்வுகளுக்கு உட்படுத்திப்பார்த்தோம். அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட ஒருவரது மாதிரியை எடுத்து எத்தனை நாட்களில் எவ்வாறான மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றது என்பதை அவதானித்தோம்.

அதேபோல் ஏனைய இரண்டு தடுப்பூசிகளின் சோதனை முயற்சிகளிலும் சாதகமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. எனவே மாற்றுத் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க முடியும் என்ற தீர்மானத்தை நாம் எட்டியுள்ளோம்.

இதற்கு மாறாக மொடேனா, பைசர் ஆகிய தடுப்பூசிகளையும் இலங்கையில் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட உடன்படிக்கைகளில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். அடுத்த மாதமளவில் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment