அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கவே போக்குவரத்திற்கு அனுமதி, இதனால் கொவிட் நிலைமை பாரதூரமாகும் என்று நாம் எண்ணவில்லை : இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கவே போக்குவரத்திற்கு அனுமதி, இதனால் கொவிட் நிலைமை பாரதூரமாகும் என்று நாம் எண்ணவில்லை : இராணுவத் தளபதி

(எம்.மனோசித்ரா)

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கொழும்பிற்குள் வாகனங்கள் பிரவேசிக்கும் அளவு அதிகமாகவுள்ளது. எனினும் இதன் காரணமாக கொவிட் நிலைமை பாரதூரமானதாகும் என்று நாம் எண்ணவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அத்தியாவசிய சேவைகளை மக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என்பதற்காகவே வாகன போக்குவரத்திற்கு வரையறுக்கப்பட்டளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எனினும் எந்தவொரு பொதுபோக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே அதிகளவில் வாகனங்கள் வருவதால் கொவிட் நிலைமை பாரதூரமானதாகும் என்று நாம் எண்ணவில்லை.

காரணம் தற்போது கொழும்பிற்குள் பிரவேசிப்பவை தனி வாகனங்களாகவே உள்ளன. எனவே அதில் பயணிக்கும் நபர்கள் பெருமளவான மக்களுடன் தொடர்பைப் பேணுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும். எனவே இதன் மூலம் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை.

எவ்வாறிருப்பினும் முன்னெடுக்கப்பட்டுள்ள சகல நடவடிக்கைகளும் நூறு வீதம் சரியானவை என்றும் கூற முடியாது. சில இடங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கக்கூடும். எனவே நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

குறிப்பாக தற்போது ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக் கொள்பவர்களுக்காக மாத்திரம் விசேட போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதற்கமைய பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்பவர்களை உரிய வங்கிகளுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment