இலங்கைக்கு 48 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

இலங்கைக்கு 48 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்

(நா.தனுஜா)

கொழும்புத் துறைமுகத்திற்கு அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து கடற்சூழல் பெருமளவிற்கு மாசடைந்திருப்பதுடன் அதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீர்செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் 200,000 யூரோ நிதியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது.

இலங்கை ரூபாவில் சுமார் 48 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்த நிதியுதவியின் மூலம் கப்பல் தீப்பரவலால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை புத்தளம், மாத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15,000 பேர் பயனடைவார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.

மீன்பிடி சமூகம் உள்ளடங்கலாக குறித்த அனர்த்தத்தினால் பாதிப்படைந்த தரப்பினருக்கு அவசியமான உதவிகளை வழங்கி வரும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இந்த நிதியுதவியானது வெகுவான பங்களிப்பை வழங்கும்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியுதவியை வழங்குவதற்கும் இந்த நிதி பயன்படும்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டமையால் தமது வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இது உதவியாக அமையும்.

அதேவேளை, கப்பலின் பாகங்கள் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் என்பன தொடர்ந்து கரையொதுங்கி வரும் நிலையில், அவற்றை சுத்தம் செய்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதையும் இந்த நிதியுதவி பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இதனூடாக கடற்பிராந்திய சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களுக்கு அவசியமான பாதுகாப்பு அங்கிகளையும் உபரணங்களையும் பெற்றுக் கொடுக்க முடியும்.

கப்பல் அனர்த்தத்தினால் வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கான நிதியனுசரணைகளை வழங்குபோது பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடையோர் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பெருமளவான இரசாயனப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பதார்த்தங்களை ஏற்றிவ ந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்திற்கு அண்மையில் தீப்பரவலுக்குள்ளானது.

அதன் விளைவாக மிக மோசமான கடற்சூழல் அழிவு என்று கருதத்தக்க அனர்த்தத்தை தற்போது இலங்கை எதிர்கொண்டிருக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியைம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

சுமார் 12 நாட்கள் வரை தொடர்ந்த தீப்பரவலின் காரணமாக கப்பலில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டதுடன் அதிலிருந்த பிளாஸ்டிக் சிறு துணிக்கைகள், இரசாயனப் பதார்த்தங்கள் என்பன கடற்சூழலில் கலந்ததையடுத்து பாரிய சூழல் மாசடைவு ஏற்பட்டுள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment