38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்ப தலைவர் காலமானார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் வாழ்ந்து வந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் ஸியோனா சாணா தனது 76 வயதில் காலமானார்.
அவருக்கு 38 மனைவிகள், 89 பிள்ளைகள், 36 பேரக்குழந்தைகள் இருந்ததால், உலகிலேயே மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக இவர் அறியப்பட்டு வந்தார்.
நீரிழிவு, உயர் அழுத்தத்துடன் அவர் பாதிக்கப்பட்டு வந்தார். அவர் சேர்க்கப்பட்ட மருத்துவமனையின் இயக்குநர் லால்ரின்துலு அங்கா, "ஸியோனா வாழ்ந்த பக்தவாங் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக அவரது நிலைமை மோசமடைந்தது. எனவே மருத்துவமனைக்கு அவரை குடும்பத்தினர் அழைத்து வந்தனர். ஆனால், அவரது உயிர் பிரிந்து விட்டது," என்று தெரிவித்தார்.
ஸியோனாவின் வாரிசுகள் அனைவரும் 100 அறைகள் கொண்ட நான்கு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
தனது முதலாவது மனைவியை திருமணம் செய்து கொண்டபோது ஸியோனாவின் வயது 17. அப்போது அந்த பெண் இவரை விட மூன்று வயது மூத்தவராக இருந்தார்.
உலகின் மிகப்பெரிய குடும்பமாக அறியப்படும் இவரது குடும்பத்தினர் வாழும் பகுதி, மிசோரம் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலா இடமாகவும் மாறியதால் இவர்கள் வாழும் குடியிருப்புப்பகுதி சுற்றுவாசிகளிடையேயும் உள்ளூர் மக்களிடையேயும் மிகவும் பிரபலமானது.
ஸியோனாவின் மறைவுக்கு மாநில முதல்வர் ஸோராம்தாங்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் பல தார திருமணங்களை ஏற்கும் சுவாந்தர் சமயத்தின் தலைவராக இருந்தவர் ஸியோனா. இந்த சமயத்தை இவரது தாத்தா குவாங்துஹா உருவாக்கினார். 1942 இல் ஹம்வாங்கான் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இந்த சமயத்தை குவாங்துஹா உருவாக்கினார்.
அப்போது முதல் இந்த குடும்பம் அய்ஸ்வாலில் இருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ள பக்தவாங் கிராமத்தில் வாழ்ந்து வருகிறது. இந்த பகுதியில் 400 குடும்பங்கள் சுவாந்தர் சமயத்தை ஏற்று வாழ்ந்து வருகின்றன.
No comments:
Post a Comment