பதினைந்து வயது சிறுமியை பாலியல் செயற்பாடுகளுக்காக பல நபர்களுக்கு விற்பனை செய்த 35 வயது நபர் சிக்கினார்...! - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

பதினைந்து வயது சிறுமியை பாலியல் செயற்பாடுகளுக்காக பல நபர்களுக்கு விற்பனை செய்த 35 வயது நபர் சிக்கினார்...!

(எம்.மனோசித்ரா)

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக பல நபர்களுக்கு விற்பனை செய்த 35 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸை பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே குறித்த சந்தேகநபர் நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கஸ்கிஸை பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கஸ்கிசை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை 35 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடச் செய்தமை தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் குறித்த நபர் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் மாடி வீடொன்றை வாடகைக்கு பெற்று, பல நபர்களுடன் குறித்த சிறுமியை பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. 

சிறுமியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வெவ்வேறு வகையாக விளம்பரங்களை செய்து இவ்வாறான செயற்பாட்டில் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சிறுமி தெல்கொட பிரதேசத்தில் வசிப்பவர் என்றும், அவரது தாயிடமிருந்து இவரை பெற்று இவ்வாறு பாலியலில் ஈடுபடுத்தியுள்ளமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கமைய சிறுமியின் தாயிடம் இது தொடர்பில் விசாரணைகள் முன்னடுக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் செவ்வாயன்று மொரட்டுவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் கீழ் பெண்னொருவரை பாலியல் நடவடிக்கைகளுக்காக பணத்திற்கு விற்பது குற்றமாகும். அதற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் குறித்த சிறுமியை கடந்த 3 மாதங்களாக பல நபர்கள் பாலியலுக்காக பணத்தைக் கொடுத்து பயன்படுத்திக் வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. அவ்வாறான நபர்கள் தொடர்பிலும் கஸ்கிசை பொலிஸாரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment