தற்போதைய நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் செப்டெம்பரில் இருபதாயிரம் மரணங்கள் இலங்கையில் பதிவாகலாம் : நிலைமையை தடுப்பதற்கு அரசாங்கத்திற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை அவதானம் என்கிறார் மங்கள சமரவீர - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

தற்போதைய நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் செப்டெம்பரில் இருபதாயிரம் மரணங்கள் இலங்கையில் பதிவாகலாம் : நிலைமையை தடுப்பதற்கு அரசாங்கத்திற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை அவதானம் என்கிறார் மங்கள சமரவீர

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் தற்போது காணப்படும் கொவிட் பரவல் நிலைமை தொடர்ந்தும் நீடித்தால், எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் கொவிட் தொற்றால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 20,000 ஐ விட அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் பல்கலைக்கழகம் விடுத்துள்ள இந்த அறிவிப்பை அவதானத்தில் எடுத்து இலங்கையிலுள்ள அதிகாரிகள் பொறுத்தமான தீர்வை வழங்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

வொஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவித்தல் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அமெரிக்காவின் வொஷிங்கடன் பல்கலைக்கழகம் உலகலாவிய ரீதியில் வைரஸ் பரவலை நன்கு மதிப்பீடு செய்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

உலகில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சகல நாடுகள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இலங்கை தொடர்பிலும் பல காரணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை குறித்து அரசாங்கம் துரிதமாக அவதானம் செலுத்த வேண்டும்.

வொஷிங்கடன் பல்கலைக்கழகம் அதன் அறிக்கையில் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. அவற்றில் மிக முக்கியமானதாக இலங்கையில் இதே நிலைமை தொடருமானால் எதிர்வரும் செப்டெம்பரில் அதாவது, அடுத்த 4 மாதங்களில் கொவிட் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை 20000 ஐ விட உயர்வடையக் கூடும்.

அவ்வாறானதொரு நிலைமையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் எந்த வகையில் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது என்பதோடு, அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு அரசாங்கத்திற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

அதிகளவான கொவிட் தொற்றாளர்களும், மரணங்களும் பதிவாகிய நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரித்தானியா என்பவற்றை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி வழங்கும் பணிகளை முறையாகவும் துரிதமாகவும் முன்னெடுத்தமையினால் தற்போது அந்நாடுகளால் மரணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

இங்கிலாந்து போன்ற நாடுகள் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் வழமைக்கு திரும்பக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. 

எனவே வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை கொள்வனவு செய்து, நாட்டில் முறையான திட்டமிடலுடன் தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுத்தால் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும்.

தடுப்பூசி வழங்கும் பணிகளில் தனியார் துறையினரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, விரும்பியவர்களுக்கு தடுப்பூசிகளை கொள்வனவு செய்து அவற்றை வழங்குவதற்கு அனுமதியளித்தால் இலங்கை சனத் தொகையில் 70 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசியை வழங்க முடியும். கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் 22 மில்லியன் சனத் தொகையில் 13 மில்லியன் மக்களுக்காவது தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.

உலக நாடுகள் பலவும் தடுப்பூசியை வழங்குவதற்கு தயாராகவுள்ளன. எனவே அரசாங்கமும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்களும் வெளிநாடுகளுடன் போட்டியிட்டுக் கொண்டிருக்காமல், அவற்றின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பவற்றின் ஒத்துழைப்புக்கள் அத்தியாவசியமானவையாகும். இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தெளிவான தீர்வொன்றை வழங்காவிட்டால் இலங்கைக்கும் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றார்.

No comments:

Post a Comment