(நா.தனுஜா)
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் மனுவொன்றை வெளியிட்டிருப்பதுடன் அதில் கையெழுத்திடுமாறு பொதுமக்களைக் கோரியுள்ளது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிப்பு ஏற்பட்டுவருகின்றது. தீவிரமாகத் தொற்றும் வீரியம் கொண்ட பி.1.1.7 வைரஸ் வகை நாடு முழுவதும் பரவி வருகின்றது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால், அது சுகாதார முறைமையில் அதீத சுமையினை ஏற்படுத்தி சுகாதாரப் பணியாளர்களுக்கு அதிகரித்த அபாய நேர்வினையும் இறப்புக்களில் அதிகரிப்பினையும் ஏற்படுத்தும்.
இம்மாதம் 2 ஆம் திகதி 1891 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டாதகக் கூறப்பட்டது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கினை விட அதிகரித்தது.
இவ்விடயத்தில் உடனடியாக தன்முனைப்பான நடவடிக்கைகள் இல்லாமையானது இலங்கைப் பிரஜைகளின் சுகாதாரம் மற்றும் நலனோம்புகையினை ஆபத்திற்குள்ளாக்கும் அதேவேளை, எமது பொருளாதாரத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் சேதத்தினை ஏற்படுத்துகின்றது. தீர்மானகரமாகச் செயற்படத் தவறினால் அதற்கு இலங்கையர்கள் உயிர்களையே விலையாகக் கொடுக்கவேண்டியிருக்கும்.
எனவே இலங்கைப் பிரஜைகள் என்ற ரீதியில் மிகச் சிறந்த எல்லைக் கட்டுப்பாட்டினை அமுல்படுத்துமாறும் நாட்டிற்குள்ளும் நுழைவிடங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் நாட்டினுள் முழுவேகத்தில் பரவிவரும் பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்த செயற்திறனான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
செயற்திறனற்ற எல்லைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் நுழைவுமையங்களிலும் நாட்டினுள்ளும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆற்றலில் அதிகரித்துவரும் சவால்கள் ஆகியவை நாட்டை அபாயநேர்வுக்குள் தள்ளிவருகிறது.
அதேவேளை கொவிட்-19 தொற்றில் ஏற்பட்டு வரும் அதிகரிப்பினைக் கையாள்வதற்கு நாட்டில் வரையறுக்கப்பட்ட உட்கட்டமைப்பு ஆற்றலே காணப்படுகின்றது. தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெருமளவிற்கு எதிர்வினையாற்றல் நடவடிக்கைகளாகவே காணப்படும் அதேவேளை, இது விடயத்தில் ஒத்திசைவற்ற கொள்கைகளையும் அரசாங்கம் கொண்டுள்ளது.
கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடங்களைக்கற்று, திரிபடைந்துள்ள கொரோனா வைரஸ் உள்நுழைவதைக் கட்டுப்படுத்த சிறந்த சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு தொற்றுப்பரவலைக் குறைப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்தினைச் சார்ந்ததாகும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment