நாளை இரவு முதல் 4 நாட்களுக்கு இலங்கை முழுவதும் பயணத்தடை : தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் எவ்வித இடையூறும் இல்லை : ஊரடங்குச் சட்டம் அல்ல; வாகனங்கள், பொதுமக்கள் பயண கட்டுப்பாடு : அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய வீட்டை விட்டு வெளியேற அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

நாளை இரவு முதல் 4 நாட்களுக்கு இலங்கை முழுவதும் பயணத்தடை : தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் எவ்வித இடையூறும் இல்லை : ஊரடங்குச் சட்டம் அல்ல; வாகனங்கள், பொதுமக்கள் பயண கட்டுப்பாடு : அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய வீட்டை விட்டு வெளியேற அனுமதி

நாளை (13) இரவு 11.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

ஆயினும் குறித்த காலப் பகுதியில், மேல் மாகாணத்தில் தற்போது இடம்பெற்று வரும் தடுப்பூசி வழங்கல் திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

மே 31 வரை ஏற்கனவே பயணத்தடை
இதேவேளை, ஏற்கனவே இன்று (12) இரவு 11.00 மணி முதல் எதிர்வரும் மே 31ஆம் திகதி வரை, தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியிலான பயணத் தடை விதிக்கப்படுவதாக, இராணுவத் தளபதி அறிவித்திருந்ததோடு, இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருட்களின் போக்குவரத்துக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதாகவும், நிலையில், தற்போது நாடு முழுவதும் 4 நாட்களுக்கு இவ்வாறு பயணத்தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் ரோஹண விளக்கம்
இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண, இக்காலப் பகுதியில் அமுல்படுத்தப்படுவது, ஊரடங்குச் சட்டம் அல்ல எனவும், வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து இதன் மூலம் மட்டுப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய தேவைக்கு அனுமதி
ஆயினும், மருத்துவ தேவைகள், சுகாதார சேவைகளைப் பெறுதல், அத்தியாவசிய தேவைகள், சேவைகள், விமான நிலையத்திற்குச் செல்லுதல் உள்ளிட்ட விடயங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக, அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

அடையாள அட்டை இறுதி இலக்கம் ஒற்றையா, இரட்டையா?
நாளை (13) முதல் அத்தியாவசிய தேவைக்கு வெளியில் வருவோர் தங்களது தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திர இலக்கத்தின் இறுதி இலக்கத்திற்கு அமைய, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த அடையாள அட்டையின் இலக்கத்தின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாக (1, 3, 5, 7, 9) இருப்பின் அன்றைய நாளின் திகதியின் இலக்கம் ஒற்றை இலக்கமாகவும், அது இரட்டை இலக்கமாக (0, 2, 4, 6, 8) இருப்பின், இரட்டை இலக்கமுடைய திகதியிலும் வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைக்காக செல்ல முடியும் என, அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெளிநாட்டவர்கள்?
வெளிநாட்டவர்கள் அவர்களது கடவுச்சீட்டு மற்றும் விசேட சாரதி அனுமதிப்பத்திர இறுதி இலக்கத்திற்கு அமைய இந்நடைமுறையை பின்பற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்
இதேவேளை, சுகாதா அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொவிட்-19 தொடர்பான விதிமுறைகள் தொடர்பில் தெரிவித்த அஜித் ரோஹண, பொதுப் போக்குவரத்தில் வாகனங்களின் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் பயணிக்க முடியும் எனவும், வாடகை வாகனங்களில் கார் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாரதியைத் தவிர 2 பேர் பயணிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச, தனியார் துறைக்கு ஆலோசனை
அரச தனியார் துறை நிறுவனங்கள், மிகக் குறைந்தபட்டச ஊழியர்களை கடமைக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, முடிந்த அளவில் வீட்டிலிருந்து பணியாற்றுவதை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கூட்டங்களில் 10 பேருக்கே அனுமதி
அலுவலகங்கள், அத்தியாவசிய சேவைகள் தொடர்பான நிறுவனங்களின் கூட்டங்களில் 10 பேருக்கே மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதோடு, முடிந்த வரை இணைய வழி கூட்டங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டள்ளது.

நிறுவனங்களில் 25% ஆனோருக்கு அனுமதி
பல்பொருள் அங்காடிகள், சந்தைகள், வங்கிகள், பலசரக்கு விற்பனை நிலையங்கள், பேக்கரிகள், சிகையலங்கார நிலையங்களில் அதன் கொள்ளளவில் 25% வாடிக்கையாளர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு. நீதிமன்றங்களிலும் அதே நடைமுறைக்கு அனுமதி.

சிறைச்சாலைகள்
உறவினர்கள் சிறைக் கைதிகளை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகள்
அரச மற்றும் தனியார் வைத்தியசலைகளில் பார்வையிட வருவோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமணங்கள்
திருமண நிகழ்வுகளுக்கு மறு அறிவித்தல் வரை அனுமதி இல்லை என்பதோடு, திருமண பதிவு செய்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சாட்சிகள் உள்ளிட்ட 15 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மரண நிகழ்வுகள்
மரண சடங்குகள் 24 மணி நேரத்திற்குள் நிறைவு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதுடன், 15 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றுகூடல்
வீடுகளில் விருந்துபசாரங்கள், மதத் தலங்களளில் ஒன்றுகூடல்கள், தங்குமிடங்களில் வெளிநபர்களுக்கு அனுமதி கிடையாது

உடற்பயிற்சி
உடற்பயிற்சி நிலையங்கள் மே 31 வரை மூடப்பட்டிருக்கும் என்பதோடு, நடைபயிற்சி பாதைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அதில் ஒன்று கூடி நிற்க அனுமதி கிடையாது.

பொழுதுபோக்கு
திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும்

No comments:

Post a Comment