பொலிஸாருக்கு அவசர அழைப்பை மேற்கொண்ட யுவதிக்கு விளக்கமறியல் - சகோதரியை பிணையில் விடுவித்த நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

பொலிஸாருக்கு அவசர அழைப்பை மேற்கொண்ட யுவதிக்கு விளக்கமறியல் - சகோதரியை பிணையில் விடுவித்த நீதிமன்றம்

(செ.தேன்மொழி)

பொலிஸ் தலைமையகத்தின் 119 என்ற அவசர தகவல் பிரிவுக்கு போலி தகவலை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யுவதி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் இடம்பெறும் குற்றச் செயற்பாடுகள் மற்றும் தங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பில் பொதுமக்கள் உடனே பொலிஸாருக்கு அறிவிப்பதற்காகவே 119, 118 மற்றும் 1997 என்ற தொலைபேசி அழைப்புகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சிலர் அதனை தேவையின்றி பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. 

அதற்கமைய 119 என்ற அவசர தகவல் பிரிவானது, குறிப்பிட்ட ஒரு தருணத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் குற்றச் செயற்பாடு அல்லது அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதாகும். ஆனால் பெருந்தொகையானவர்கள் அதனை முறைகேடாக பயன்படுத்துகின்றனர்.

இதேவேளை, இந்த இலக்கங்களுக்கு கிடைக்கப் பெறும் அழைப்புகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை போலியானவையாகவே காணப்படுகின்றன.

அதற்கமைய கடந்த சனிக்கிழமை இரவு 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பொன்று கிடைக்கப் பெற்றுள்ளதுடன், தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு வாகனத்தினால் வந்துள்ள சிலர் வெடி பொருட்களை கொண்டு அனர்த்தமொன்றை மேற்கொள்ள தயாராகிக் கொண்டிருப்பதாக அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அந்த அழைப்பில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை என்பதை கண்டறிந்திருந்தனர். பின்னர் அழைப்பினை ஏற்படுத்தியவர் யார் என்பதை கண்டறிவதற்காக விசாரணைகளையும் ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு போலியான தகவலை வழங்கியமை தொடர்பில் தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதியொருவரை கைது செய்திருந்ததுடன், சந்தேக நபரான யுவதி அவருடைய 28 வயதுடைய சகோதரியின் தொலைபேசியை பயன்படுத்தியே இவ்வாறு போலி தகவலை வழங்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

தங்கொட்டுவ பொலிஸார் சந்தேக நபர்களான யுவதிகள் இருவரையும் கைது செய்து, மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். 

இதன்போது நீதிவான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட யுவதியை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அவரது சகோதரிக்கு பிணையில் செல்லவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இது போன்ற இலக்கங்களை தேவையின்றி பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment