ஒரு தடுப்பூசியை மட்டுமே பாவிக்கும் வகையில் உபயோகிக்கக் கூடிய ஜோன்சன் என்ட் ஜோன்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கைக்கு கொள்வனவு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள இராஜாங்க அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் தடுப்புக்கான பல்வேறு தடுப்பூசிகள் தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அத்தகைய தடுப்பூசிகளை பதிவு செய்வதற்கு பிரதிநிதி ஒருவர் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
அந்த வகையில் நேற்றையதினம் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் அது தொடர்பில் கலந்துரையாடிய போது அவர் பதிவு செய்வதற்கான தகவல்களை அனுப்புமாறு பைஸர் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அதற்கிணங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களில் 85 அல்லது 90 வீதமானோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள் 200 பேருக்கும் அதிகமானோருக்கும் பாராளுமன்ற ஊழியர்கள் 98 வீதமான பேருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனேகா தடுப்பூசிகளே தற்போது நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த தடுப்பூசியானது இரண்டாவது தடவையும் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment