முத்துராஜவெல சுற்றாடலை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை பின்பற்றாமை குறித்து பேராயர் கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

முத்துராஜவெல சுற்றாடலை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை பின்பற்றாமை குறித்து பேராயர் கண்டனம்

வாக்குறுதி வழங்கப்பட்டதை போல முத்துராஜவெல சுற்றாடலை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்து கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தனது கண்டணத்தை வௌியிட்டுள்ளார்.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சிறிபால அமரசிங்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன், ஜனவரி 21 ஆம் திகதி பேராயர் இல்லத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக பேராயரினால் வௌியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முத்துராஜவெல சுற்றாடலில் எவ்வித செயற்றிட்டங்களோ அல்லது தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளுக்கோ சந்தர்ப்பம் வழங்கப்படாது என இந்த கலந்துரையாடலின் போது உறுதி வழங்கப்பட்டதாக பேராயர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எனினும், வழங்கப்பட்ட உறுதியை மீறி முத்துராஜவெல மற்றும் அண்மித்த கிராமங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கொண்டுவருவதாக வௌியிடப்பட்ட உத்தியோகபூர்வ தீர்மானத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.

இதனால், தனியார் நிறுவனங்களினால் எதேச்சகரமாக உரிமை கோரப்பட்டு இடப்பட்டுள்ள பதாகைகளை அகற்றி, முத்துராஜவெல தேசிய சரணாயலத்தை மீண்டும் வனஜீவராசிகள் பாதுகாப்பு வலயமாக பெயரிடுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தனது அறிக்கையினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment