அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்க பயங்கரவாதிகள் சதி - உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்ட வளாகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 4, 2021

அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்க பயங்கரவாதிகள் சதி - உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்ட வளாகம்

வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அவரது வெற்றியை உறுதி செய்து சான்றளிப்பதற்காக அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி கூடியது.

அப்போது டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

அமெரிக்க வரலாறு காணாத இந்த சம்பவத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டனர். இது உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக 300 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 4ம் திகதி (நேற்று) தாக்குதல் நடத்துவதற்கும், நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் பயங்கரவாதிகள் சதி செய்திருப்பதாக அமெரிக்க பொலிஸாருக்கு நேற்றுமுன்தினம் உளவு தகவல் கிடைத்தது.

இது குறித்து அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை எப்.பி.ஐ.யும், உள்நாட்டு பாதுகாப்பு துறையும் ஒரு அறிக்கை வெளியிட்டன.

அந்த அறிக்கையில், “பெப்ரவரி பிற்பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாத குழுவினர், அமெரிக்க நாடாளுமன்றத்தை கைப்பற்றுவது குறித்தும், அதற்கான திட்டங்கள் குறித்தும் விவாதித்து உள்ளனர். 

அத்துடன் மார்ச் 4ம் திகதிக்குள் ஜனநாயக கட்சி எம்.பி.க்களை அகற்றுவதற்கான திட்டம் குறித்தும் விவாதித்து இருக்கிறார்கள். இதற்காக ஆயிரக்கணக்கானோரை வாஷிங்டன் செல்ல வற்புறுத்தவும் விவாதித்து உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

இந்த உளவுத்தகவலை வாஷிங்டன் கேபிட்டல் பொலிஸார் உறுதி செய்தனர்.

இது பற்றி அவர்கள் கூறுகையில், “மார்ச் 4ம் திகதி நாடாளுமன்றத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. 

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம், பொதுமக்கள் மற்றும் எங்கள் பொலிஸ் அதிகாரிகளை காப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளோம். இந்த தகவலின் தன்மை காரணமாக இது குறித்த கூடுதல் விவரங்களை எங்களால் வழங்க முடியாது” என குறிப்பிட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தை பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என தகவல் வெளியானதை தொடர்ந்து பிரதிநிதிகள் சபை கூட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டது. அதேநேரம் திட்டமிட்டபடி செனட் சபை கூட்டம் நடத்தப்பட்டது.

பயங்கரவாதிகள் தாக்குதல் சதித் திட்டம் தெரியவந்ததை அடுத்து வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டது.

No comments:

Post a Comment