(எம்.எப்.எம்.பஸீர்)
இனங்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்படும் விதத்தில் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக முகப்புத்தக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவேற்றிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
மாத்தளை - யட்டவத்த பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று இரவு சிறப்பு பொலிஸ் குழுவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
53 வயதான குறித்த நபர் கடந்த மார்ச் 4 ஆம் திகதி அல்லது அண்மித்த நாட்களில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் முகப்புத்தகத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
சந்தேக நபர் ஏப்ரல் 21 தாக்குதல் தாரிகளின் புகைப்படங்களுடன் மேலும் சிலரின் புகைப்படங்களை உள்ளடக்கி இனங்களுக்கு இடையில் முரண்பாட்டையும் வெறுப்புணர்வையும் தூண்டும் விதத்தில் புகைப்படங்களை பதிவேற்றியதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
எம்.பி. ஏக்கநாயக்க எனும் பெயரில் முகப்புத்தக கணக்கொன்றினை பயன்படுத்தியே சந்தேக நபர் இந்த வேலைகளை செய்துள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 120 ஆம் அத்தியாயத்தின் கீழும், கணினிக் குற்றங்கள் தொடர்பிலான சட்டத்தின் 6 ஆம் அத்தியாயத்தின் கீழும் விஷேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சந்தேக நபர் கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment