அரசியல்வாதிகளை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளமை பொருத்தமற்ற செயற்பாடு, நீதி கோரி இனி கத்தோலிக்க மக்கள் வீதிக்கிறங்கி போராடுவார்கள் - காவிந்த ஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, February 21, 2021

அரசியல்வாதிகளை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளமை பொருத்தமற்ற செயற்பாடு, நீதி கோரி இனி கத்தோலிக்க மக்கள் வீதிக்கிறங்கி போராடுவார்கள் - காவிந்த ஜயவர்தன

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மைத் தன்மையினை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கத்தோலிக்க மக்கள் மத்தியில் குறைவடைந்துள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை ஆராய அரசியல்வாதிகளை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளமை பொருத்தமற்ற செயற்பாடாகும். நீதி கோரி இனி வீதிக்கிறங்கி போராடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

ஒரு சம்பவத்தை விசாரணை செய்து ஒரு குழு சமர்ப்பித்த அறிக்கையை ஆராய பிறிதொரு குழு இவ்வாறான செயற்பாடுகள் நாட்டு மக்களை ஏமாற்றி காலதாமதத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகவே கருத வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தடுக்க முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தலைவர் என்ற ரீதியில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

அரச தலைவர்களுக்கிடையில் காணப்பட்ட தனிப்பட்ட கருத்து வேறுப்பாடுகளுக்கு அப்பாவி மக்கள் பலியானார்கள். நல்லாட்சி அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணிப்பதற்கு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் பிரதான காரணியாக அமைந்தது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தேர்தல் கால பிரசாரமாக்கி ஜனாதிபதி மற்றும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆட்சிக்கு வந்து 3 மாத காலத்திற்குள் ஏப்ரல் குண்டுத் தாக்குதல், பிணைமுறி விவகாரம் ஆகிய விடயங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். 

ஏப்ரல் 21 குண்டுத் தன்மை வெளிப்படுத்த வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையடிப்படையில் கத்தோலிக்க மக்கள் ஜனாதிபதி மற்றும் அவர் சார்ந்த பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உண்மைத் தன்மையுடன் செயற்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. துறைசார் நிபுணர்களினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஆராய அரசியல்வாதிகளை உள்ளடக்கிய குழுவினரை நியமித்துள்ளமை கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புயைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்கள், முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினால் நீதிமன்ற செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத சூழல் காணப்படுவதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விவகாரத்தை கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு குறிப்பாக கத்தோலிக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஒரு விடயத்தை விசாரிக்க ஒரு குழு, குழுவின் அறிக்கையை ஆராய பிறிதொரு குழு என்பது காலதாமதத்தை ஏற்படுத்தும் செயல். 

ஜனாதிபதி விசாரணை அறிக்கையை நாட்டு மக்கள் அறிந்து கொள்வதற்கு உரிமையுண்டு ஆகவே அரசாங்கம் அறிக்கையை பாராளுமன்றிற்கும் சமர்ப்பிக்க வேண்டும். நீதியை பெற்றுக் கொள்ள இனி கத்தோலிக்க மக்கள் வீதிக்கிறங்கி போராடுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment