ஏ.எச்.ஏ. ஹூஸைன்
மட்டக்களப்பில் சிறுபோகம் எனப்படும் நீர்ப்பாசன வசதி கொண்டு செய்யப்படும் நெற்செய்கையை எதிர்வரும் மார்ச் மாதத்தில் விதைப்பதற்கு மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தகவல் பிரிவு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் புதன்கிழமை 24.02.2021 மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதனடிப்படையில் உன்னிச்சை மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களிலான பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் எதிர்வரும் 04ஆம் திகதியும், உறுகாமம் கித்துள்வெவ வெலிகாகண்டி மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களிலான பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், அன்றையதினம் பி.ப. 2.00 மணிக்கு செங்கலடி பிரதேச செயலக மண்டபத்திலும் இடம்பெறவுள்ளன.
மேலும் கடுக்காமுனை, புளுக்குணாவி, அடைச்சகல் குழம் மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களிலான பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், பட்டிப்பளை பிரதேச செயலகப்பரிவில் எதிர்வரும் 06 ஆம்திகதி காலை 9.30 மணிக்கு, கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலும், நவகிரி, தும்பங்கேணி மற்றும் சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களிலான பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் 6 ஆம்திகதி பி.ப. 2.00 மணிக்கு கலாசார மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது.
கட்டுமுறிவு, மதுரங்கேணி, கிரிமிச்சை சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களிலான பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், வாகரை பிரதேச செயலக மண்டபத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9.30 மணிக்கும், வாகனேரி. புனானை, தரவை, வடமுனை சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களிலான பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஆரம்பக் கூட்டம், அதே தினம் பி.ப. 2.00 மணிக்கு கிரான் ரெஜி மண்டபத்திலும் இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர இம்முறை செய்கை பண்ணப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்கான நீர் விடுவிப்பு, உழவு நடவடிக்கை, கால்நடைகளை அகற்றுதல், விதைப்பு தினம் போன்ற திகதிகள் இவ்விவசாய ஆரம்பக் கூட்டங்களில் தீர்மானிக்கப்படவுள்ளன.
இம்மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஹலீஸ், காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என். நாகரெத்தினம், மட்டக்களப்பு பிராந்திய பிரதி மாகாண நீர்பாசன பணிப்பாளர் வே. ராஜகோபாலசிங்கம், மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜூதீன், விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வீ.பேரின்பராசா உட்பட பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பிரசன்னமாயிருந்தனர்.
No comments:
Post a Comment