வேலை வாய்ப்பு, மணல் கொள்ளை தொடர்பாக முறையிட்டால் சட்ட நடவடிக்கைக்கு உதவ தயார் - யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் - News View

About Us

About Us

Breaking

Friday, January 1, 2021

வேலை வாய்ப்பு, மணல் கொள்ளை தொடர்பாக முறையிட்டால் சட்ட நடவடிக்கைக்கு உதவ தயார் - யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மாநகர சபையில் வேலை பெற்றுத் தரலாம் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முன் வந்தால், சட்டத்தரணி எனும் முறையில் சட்ட நடவடிக்கைக்கு உதவ தயாரென யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களுள்ளன. அதனால் அவர்கள் இருவரையும் எமது அணிக்குள் உள்வாங்கவில்லை.

ஒருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர், மற்றையவர் மாநகர சபையில் வேலை பெற்று தரலாமென கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவரென எனக்கு வாய் மொழி மூல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.

இந்நபர் மாநகர சபை பணத்தை கையாடல் செய்யாமையால் என்னால் முதல்வர் எனும் ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருந்தால், சட்டத்தரணி எனும் ரீதியில் நிச்சயமாக அவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கத் தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.

அதேவேளை, நல்லூர் பிரதேச சபையின் கடந்த அமர்வின் போது, தங்களுடன் (மணிவண்ணனுடன்) மது போதையில் வந்த காடையர் கூட்டம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்த குற்றச்சட்டு தொடர்பில் கேள்வி எழுப்பிய போது,

கோமாளித்தனமான கருத்துக்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஆக்கபூர்வமாக விடயங்கள் தொடர்பில் விவாதிப்போமென தெரிவித்தார்.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment