ஜோ பைடன், டொனால்ட் டிரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்து இரு நாடுகள் இடையிலான இயல்பான உறவை மீட்டெடுப்பார் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் கீரியும் பாம்புமாக மோதி வருகின்றன.
ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டு பதவிக் காலத்தில் அமெரிக்கா - சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது.
வர்த்தகம், மனித உரிமை மீறல், கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகின்ற 20 ஆம் திகதி பதவியேற்கிறார். அவர் பதவிக்கு வந்ததும் டிரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்து இரு நாடுகள் இடையிலான இயல்பான உறவை மீட்டெடுப்பார் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியதாவது சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா - சீனா உறவுகள் முன்னோடி இல்லாத வகையில் சிக்கல்களில் சிக்கியுள்ளன. அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தால் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
புதிய நிர்வாகம் விவேகமான அணுகுமுறைக்கு திரும்பும், சீனாவுடனான உரையாடலை மீண்டும் தொடங்கும், இரு தரப்பு உறவுகளுக்கு இயல்பு நிலையை மீட்டெடுக்கும், ஒத்துழைப்பை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment