2021 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத் தொடர் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பிரதானமான விடயமாக நாங்கள் பார்க்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னாரிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அனைத்து தமிழ் தரப்புக்களும் இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை தமிழர் தரப்பாக ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதன்போது கட்சியில் இருந்த அனைவரும் குறித்த கோரிக்கையினை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் பிற்பாடு இவ்விடயம் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்து அனைவரும் இணைந்து ஒரு செயல்பாட்டை ஒரு நிலையை ஐ.நாவிற்கு தெரியப்படுத்துவதே எங்களுடைய கருத்தாக உள்ளது. எனினும் நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
குறிப்பாக இலங்கையின் ஆலோசனைப்படி அல்லது இலங்கையின் கோரிக்கையை முன் வைத்து இலங்கை அரசாங்கத்தினுடைய செயல்பாடுகளை அவர்கள் செய்வார்கள் என்று ஒரு சிந்தனையில் ஐ.நா செயல்படுமாக இருந்தால் அவ்விடயம் தமிழ் மக்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே அமையும். முழுமையான சர்வதேச பொறிமுறை என்பது மிகவும் அவசியமாக இருக்கின்றது.
அவ்வாறு இருந்தால் மாத்திரம்தான் ஐ.நாவின் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பாக அமையும். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெற உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் தமிழர்களுக்கு மிக முக்கியம். தமிழ் தரப்பு ஒன்றாக சமர்ப்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அதன் வரைவு மிக விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment