தப்பிச் சென்ற 3 ஆவது கொரோனா கைதியும் பிடிபட்டார் - மேலும் இருவருக்கு வலைவீச்சு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 10, 2021

தப்பிச் சென்ற 3 ஆவது கொரோனா கைதியும் பிடிபட்டார் - மேலும் இருவருக்கு வலைவீச்சு

(எம்.எப்.எம்.பஸீர்)

பொலன்னறுவை - கல்லேல்ல கொவிட்19 சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற தொற்றாளர்களான கைதிகளில் மூன்றாது கைதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரம்மலை - போகஹபிட்டியில் வைத்து குறித்த சந்தேகநபரை பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார். 

புத்திக விமலசிறி எனும் குருநாகல் உஹுமீய பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

நாரம்மலை பகுதிக்கு குறித்த கைதி சென்ற நிலையில், பொதுமக்கள் அவரை அடையாளம் கண்டு இவ்வாறு பொலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தப்பிச் சென்ற கொவிட் தொற்றுக்குள்ளான கைதிக்கு தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய விடயங்கள் தொடர்பில் நாரம்மலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலன்னறுவை - கல்லேல்ல கொவிட்19 சிகிச்சை நிலையத்திலிருந்து 5 கைதிகள் கடந்த 2019 டிசம்பர் 31 ஆம் திகதி அதிகாலை தப்பிச் சென்றிருந்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் ஐவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

31 வயதான புத்திக விமலரத்ன, 27 வயதான கவிந்து மதுஷங்க, 26 வயதான கெலும் அப்புஹாமி, 52 வயதான நிமல் வசந்த மற்றும் 36 வயதான சுமித் புஷ்பகுமார ஆகிய கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். 

இவர்களில் புத்திக விமலரத்ன என்பவர் ஆரச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டிலும், கெலும் அப்புஹாமி திருட்டு சம்பவம் தொடர்பிலும், நிமல் வசந்த கொள்ளை தொடர்பிலும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ஏனைய இருவரும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் இருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 0718 591233 என்ற இலக்கத்தினுடாக பொலன்னறுவை தலைமையக பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு அல்லது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர்.

அவ்வாறான பின்னணியில் குறித்த தினமே (டிசம்பர் 31) தப்பிச் சென்றவர்களில், ஒரு கைதி சிலாபம் மாதம்பை பகுதியில் வைத்து மாதம்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். கவிந்து மதுஷான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்ப்ட்டிருந்தார். 

அத்துடன் கடந்த ஜனவரி 6 ஆம் திகதி ஆரச்சிக்கட்டு - ஆணைவிழுந்தான் பகுதியில் வைத்து 52 வயதான நிமல் வசந்த எனும் சந்தேகநபரும் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்யப்ப்ட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது 3 ஆவது நபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய இருவரையும் தேடி தொடர் விசாரணைகளை பொலன்னருவை பொலிசாரும் ஏனைய பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டன.

No comments:

Post a Comment