அமெரிக்க எல்லைக்கு அருகில் மெக்சிகோவின் டமவுலிபாஸ் மாநிலத்தில் குறைந்தது 19 சடலங்கள் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள கமர்கோ நகரில் மனித சடலங்கள் கொண்ட 2 எரிந்த வாகனங்களை பொலிஸ் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதி, மெக்சிகோவின் போதைப் பொருள் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்ளும் இடம் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்தோர் முதலில் சுட்டுக் கொல்லப்பட்டுப் பின்னர் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சம்பவ இடத்தில் துப்பாக்கி ரவைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், அவர்கள் வேறு இடத்தில் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி, உயிரிழந்தவர்கள் கள்ளக் குடியேறிகளா என்பதைத் தீர்மானிக்க விசாரணை ஆரம்பித்திருப்பதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சில உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, அவர்கள் குவாந்தமாலாவைச் சேர்ந்த குடியேறிகளாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மெக்சிகோவில் உள்ள குவாந்தமாலா தூதரகத்தைத் தொடர்புகொண்டு, தேவையான தகவல்களைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment