MTV செனல் தனியார் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை : தடை உத்தரவு நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

MTV செனல் தனியார் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை : தடை உத்தரவு நீடிப்பு

ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தால் MTV செனல் தனியார் நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்கு, கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி லக்மாலி டி சில்வா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தடை உத்தரவை நீடிப்பதற்கு MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா ஆட்சேபனை தெரிவித்தார்.

இடைக்கால தடை உத்தரவு தொடர்பிலான விளக்கத்திற்காக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி குறிக்கப்பட்டுள்ளதால், தடை உத்தரவை நீடிக்க வேண்டும் என ஜோர்ஜ் ஸ்டூவர்ட் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் வேண்டுகோள் விடுத்தார்.

இரண்டு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி, பிரதிவாதிகள் தரப்பின் ஜனாதிபதி சட்டத்தரணி முன்வைத்த ஆட்சேபனைகளை கருத்திற்கொண்டு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை மாத்திரம் தடை உத்தரவை நீடிப்பதற்கு உத்தரவிட்டார்.

இந்த முறைப்பாட்டினை தள்ளுபடி செய்து முறைப்பாட்டாளர் தரப்பு கோரியுள்ள இடைக்கால நிவாரணங்களை நிராகரிப்பதோடு, 500 வீத வழக்குக் கட்டணத்தை பெற்றுத்தருமாறு MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜி.ஜி.அருள்பிரகாசம் கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை முன்வத்து கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தவிர MTV செனல் தனியார் நிறுவனம் தமது பதில் ஊடாக ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்திடம் 20 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி இடை மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளது.

ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் முறையற்ற விதத்திலும் குரோத மனப்பான்மையுடனும் இடைக்கால தடை உத்தரவை பெற்றுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் தரப்பு நீதிமன்ற செயற்பாடுகளை துஷ்பிரயோகம் செய்து தவறாகக் கையாண்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் தாக்கல் செய்துள்ள முறையற்ற, குரோத மனப்பான்மையுடன் கூடிய வழக்கு காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் மத்தியில் கௌரவத்திற்கு பாத்திரமான MTV செனல் தனியார் நிறுவனத்தின் நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் MTV செனல் தனியார் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பதில் மூலம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதியான MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி ஜி.ஜி.அருள்பிரகாசத்தின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, சட்டத்தரணிகளான ஜீவந்த ஜயதிலக்க, நிரஞ்சன் அருள்பிரகாசம், தமித்த கருணாரத்ன, என்.கே.அஷோக்பரன், மியுரு இகலஹேவாஉள்ளிட்ட மேலும் சில சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில் சட்டத்தரணி ருவந்த குரே ஆஜராகியிருந்தார்.

No comments:

Post a Comment