(எம்.மனோசித்ரா)
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமென கூறப்படுவதைப் போன்று போதை மாத்திரை எங்கும் இல்லை. சிலரது குறைகளை மறைப்பதற்காக மருத்துவத் துறையினரையும் முட்டாள்களாக்கும் வகையில் அரசாங்கம் பொய்களைக் கூற முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், போதை மாத்திரையொன்றின் பாவனையே மஹர சிறைச்சாலை கலவரத்திற்கு காரணமாகும் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேற்கத்தேய மருந்துகளில் எங்கும் போதை மாத்திரை இல்லை. நித்திரைக்கான சில வில்லைகள் மாத்திரமே உள்ளன.
இதேபோன்று மன அழுத்தங்களை குறைப்பதற்கான சில மருந்துகளும், பதற்றமாக உள்ளவர்களை அமைதிப்படுத்துவதற்கான மருந்துகளும் உள்ளன. அதாவது இந்த மாத்திரைகள் எதனையும் பயன்படுத்தி யாரும் போதையாவதில்லை. எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் பெரும் பொய் கூறுகிறது.
கொலைகாரர்களை மறைப்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். மனநல விசேட வைத்திய நிபுணர்கள் இது தொடர்பில் தெளிவான அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
காரணம் இவர்கள் கூறுவதைப் போன்று ஒரு மருந்து இல்லை. போதையை இல்லாமலாக்குவதற்கான மாத்திரைகள் இருக்கின்றனவே தவிர போதைக்கான மாத்திரை என ஒன்றும் இல்லை.
சிலரது குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக இவ்வாறு பொய் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாக மருத்துவ துறையினர் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. மருத்துவத்துறை பற்றி எதுவும் அறியாதவர்களே இவ்வாறான விடயங்களைக் கூறுகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment