காலி துறைமுகம் அருகில் சுற்றிவளைப்பு : போதைப் பொருட்களுடன் நால்வர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

காலி துறைமுகம் அருகில் சுற்றிவளைப்பு : போதைப் பொருட்களுடன் நால்வர் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐஸ் போதைப் பொருளை கடத்தி வந்துகொண்டிருந்ததாக நம்பப்படும் ட்ரோலர் படகொன்றினை காலி துறைமுகத்தை அண்டிய ஜாகொட்டுவ கடற்பரப்பில் வைத்து கடற்படையினரின் உதவியுடன் பொலிஸ் போதைப் பொருள் தட்டுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது படகிலிருந்த 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா எல - திக்கோவிட்ட துறைமுகத்திலிருந்து குறித்த படகு பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில், இப்படகு சர்வதேச கடற்பரப்பில் போதைப் பொருளைப் பெற்று திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில் கடற்படையினரின் உதவியுடன் பொலிஸார் கடலில் வைத்து குறித்தப் படகை மடக்கிப்பிடித்துள்ளனர்.

பொலிஸாரும் கடற்படையினரும் படகை சுற்றிவளைப்பதை அறிந்து கொண்ட படகில் இருந்த சந்தேக நபர்கள் பல கிலோ எடை கொண்ட போதைப் பொருள் பொதிகளை கடலில் வீசியுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் படகிலிருந்து 5.9 கிலோ ஐஸ் போதைப் பொருளும் ஹெரோயின் போதைப் பொருள் 2.1 கிலோவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், பாணம, தெவிநுவர, நீர்கொழும்பு, கந்தபொல பகுதிகளைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான படகொன்றே கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment