(எம்.எப்.எம்.பஸீர்)
குடி போதையில் வாகனம் செலுத்தி, விபத்தொன்றினை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில், கண்டி பொலிஸ் நிலையத்தின் எஸ்.சி.ஐ.யூ. எனப்படும் விஷேட குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, கட்டுகஸ்தோட்டை பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகரான குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி செலுத்திய கார், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவின், குருணாகல் - கண்டி பிரதான வீதியின் யட்டிவாவல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு எதிரக சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் மாசிங்க கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகரின் மேற்பார்வையில், போக்கு வரத்து பிரிவின் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment