எந்தவொரு கொள்கையும் இல்லாத படித்த முட்டாள்களே இன்று ஆட்சி நடத்துகின்றனர் - லக்ஸ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

எந்தவொரு கொள்கையும் இல்லாத படித்த முட்டாள்களே இன்று ஆட்சி நடத்துகின்றனர் - லக்ஸ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்க வாக்களித்தவர்கள், இன்று சுயாதீன ஆணைக்குழுக்களை அழிக்கவும் வாக்களித்துள்ளனர். எந்தவொரு கொள்கையும் இல்லாத படித்த முட்டாள்களே இன்று ஆட்சி நடத்துகின்றனர் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சு, இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

எமது ஆட்சிக் காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிகள் தொடர்பிலான பிரச்சினைக்கு முழுமையாக தீர்வுகளை பெற்றுக் கொடுத்தோம். ஒரு காலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கான விடுதிகளை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த காலம் இருந்தது. வீதி ஊர்வலங்களை கூட நடத்தியுள்ளனர். ஆனால் எமது ஆட்சியில் பல்கலைக்கழகங்களுக்காக 24 விடுதிகளை புதிதாக உருவாக்கினோம். 

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு மடிக் கணினிகளை பெற்றுக் கொடுக்க கடன் உதவிகளை பெற்றுக் கொடுத்தோம். புலமைப்பரிசில் தொகையை ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரித்தோம். பல்கலைக்கழகங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தோம். 

அதுமட்டுமல்ல நாம் அன்று "வைபை" பற்றியும் "டப் "பற்றியும் பேசியபோது எம்மை பார்த்து சிரித்தனர். ஆனால் இன்று அதுவே அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது.

நாம் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் முயற்சிகள் எடுத்த வேளையில் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சைட்டம் கல்வியகத்தை உருவாக்கியவர்களே அதனை எதிர்த்தனர். ஆனால் இன்று மீண்டும் அவர்களே ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். 

எமது மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டே பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்தோம். ஆனால் நாம் ஆரம்பித்த வேலைத் திட்டங்களையே இன்று அரசாங்கம் முன்னெடுத்து செல்கின்றது. 

நாம் பல்கலைக்கழக சுதந்திரத்தை வழங்கினோம். அது அத்தியாவசிய தேவையாகும். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் இன்று அரசியல் தலையீடுகளே ஏற்பட்டுள்ளது. ஆனால் நாம் சுயாதீனமாக அதற்கான அங்கீகாரத்தை வழங்கினோம்.

இன்று பல்கலைக்கழகங்கள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. ஜி.எல்.பீரிஸ் போன்றவர்களே இந்த மோசமான செயற்பாடுகளை முன்னெடுப்பது வருத்தமளிக்கிறது. தீர்மானங்கள் முன்னெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கீழ் சென்றுவிட்டது. எமது கல்விக்கான அழிவே இதுவாகும். வரலாறு இதனை சுட்டிக்காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்க வாக்களித்தவர்கள், இன்று சுயாதீன ஆணைக்குழுக்களை அழிக்கவும் வாக்களித்தனர். எந்தவொரு கொள்கையும் இல்லாத படித்த முட்டாள்களே இன்று ஆட்சி நடத்துகின்றனர். இவர்களை போன்ற நபர்களினால் தான் நாடு நாசமாகிக்கொண்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment