யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் இம்மானுவேல் ஆனல்ட்டை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இரண்டு தடவைகள் மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்ததால் மாநகர சபை முதல்வர் தனது பதவியை இழந்துள்ளார்.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் தெரிவுக்கு யாரை நிறுத்துவது என இறுதித் தீர்மானம் எடுக்கும் கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஜானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபை முதல்வர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வட மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் தலைமையில் நாளை தெரிவு இடம்பெறவுள்ளது.
யாழ்.மாநகர சபையின் முதல்வர் தெரிவு நாளை காலை ஒன்பது மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment