சரத் வீரசேகரவின் கருத்து சர்வாதிகார இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடே, இவர் பாராளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர் - மாவை சேனாதிராஜா காட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

சரத் வீரசேகரவின் கருத்து சர்வாதிகார இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடே, இவர் பாராளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர் - மாவை சேனாதிராஜா காட்டம்

(நா.தனுஜா) 

விடுதலைப் புலிகளை அழித்ததைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற சரத் வீரசேகரவின் கருத்து மிக மோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டிருக்கும் அவர் இவ்வாறு இறுமாப்புடன் பேசுவது அவர் பாராளுமன்றத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கினால் அதற்கு கூட்டமைப்பே பொறுப்புக்கூற வேண்டும் என்று நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அவருடைய கருத்து தொடர்பில் வினவியபோதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது சரத் வீரசேகரவின் கருத்து மிக மோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும். அவர் உலக வரலாற்றை அறியாமல் பேசுகின்றார். 

உலக நாடுகள் பலவற்றிலும் விடுதலைக்காகவும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவும் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டிருப்பதுடன் அவற்றில் பல போராட்டங்கள் வெற்றியும் கண்டிருக்கின்றன. 

இலங்கையில் தமிழினத்தின் உரிமைகளைப் பறித்து இராணுவத்தின் ஊடாக அவர்களை அடக்கியொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாங்கத்தினால் தமிழர்களின் அமைதிவழிப் போராட்டங்கள் அடக்கப்பட்டமையினாலேயே விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திப் போராடுகின்ற ஒரு மாபெரும் சக்தியாக இந்நாட்டில் வளர்ந்தார்கள். 

எனவே தமிழ் மக்களின் விடுதலை உணர்வினையும் கொள்கையினையும் சரத் வீரசேகரவினாலும் வேறு எந்தவொரு அரசாங்கங்களினாலும் அழித்துவிட முடியாது. 

தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கும் சரத் வீரசேகர, விடுதலைப் புலிகளை அழித்ததைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்று இறுமாப்புடன் பேசுவது அவர் பாராளுமன்றத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்துகிறது என்றார்.

No comments:

Post a Comment