யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதி வருட சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதி வருட சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளை 15 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு செய்திக் குறிப்பு ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது. 

அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு நாட்டில் எழுந்துள்ள கொரோனா பெருந் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், மாணவர்களின் நன்மை கருதி, சுகாதாரப் பகுதியினரின் அனுமதியுடன், தேவையான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான செயற்றிட்டப் பணிகளும், செயன்முறை வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மாவட்டத்துக்கு வெளியில் இருந்து, தனிப்பட்ட பயண ஒழுங்குகளுடன் அரைத்து வரப்பட்ட 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவ விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் இறுதியாண்டு ஆய்வுக்கான செயற்றிட்டப் பணிகளும், செயன்முறை வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

விடுதியில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பான முறையில் அழைத்து வருவதற்கான பயண ஏற்பாடுகளும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழக கொரோனா தடுப்பு - முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான குழுவின் சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய வகுப்புகளும், செயன்முறை அமர்வுகளும் இடம்பெறவுள்ளன என்று உள்ளது.

No comments:

Post a Comment