மொரட்டுவை, எகொட உயன, புதிய காலி வீதியில் பாதசாரி கடவையில் வைத்து மோட்டார் சைக்கிளில் மோதி இரு பெண் குழுந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எகொட உயன, புதிய காலி வீதியில் பாதசாரி கடவையில், தனது இரு பெண் குழுந்தைகளில், ஒரு வயது குழந்தையை கையில் ஏந்திய வண்ணம், மற்றைய 7 வயது சிறுமியை கையில் பிடித்தவாறு வீதியைக் கடந்த, கர்ப்பிணித் தாய் ஒருவரையும், பாணந்துறை திசையிலிருந்து மொரட்டுவை நோக்கி, மோட்டார் சைக்கிளில் வந்த 20 வயது இளைஞன் மோதியுள்ளார்.
நேற்று (04) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், குறித்த இரு பிள்ளைகளும் வீதியில் வீசப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கர்ப்பிணித் தாய் உள்ளிட்ட மூவரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த இரு சிறுமிகளும் உயிரிழந்துள்ளதோடு, 24 வயதான இரு மாத கர்ப்பிணிப் பெண் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில், மேலதிக சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொரட்டுவை, எகொட உயன, ஜோசப் பிளேஸை சேர்ந்த சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வீதிக் கடவையில் அவர்கள் பயணிப்பதையும் பொருட்படுத்தாது குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக அங்கிருந்தோர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் வீதிக் கடவைக்கு அருகில் தாயும், அங்கிருந்து சுமார் 10 மீற்றர் தூரத்தில் ஒரு வயது குழந்தையும், சுமார் 20 மீற்றர் தூரத்தில் வீசப்பட்டு கிடந்ததாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இளைஞனுக்கும், சிறு கீறலுடனான காயம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது எகொட உயன பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான குறித்த இளைஞன், கடந்த செவ்வாய்க்கிழமை (01), போட்டிக்காக வீதியில் மோட்டார் சைக்கிள் ஓடிய சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மொரட்டுவை பதில் நீதவான் சரித்த டி சில்வாவினால் சந்தேகநபருக்கு ரூபா 15,000 அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment