டொனால்ட் டரம்புக்கு ஏற்பட்டது போன்று இலங்கை அரசுக்கும் ஏற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

டொனால்ட் டரம்புக்கு ஏற்பட்டது போன்று இலங்கை அரசுக்கும் ஏற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார்

டொனால்ட் டரம்புக்கு ஏற்பட்டது போன்று இலங்கை அரசுக்கும் ஏற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவை மட்டுமல்ல முழு உலகத்தையும் கொஞ்சம் ஆட்டம் காண வைத்து விட்டது அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு.

அமெரிக்க வரலாற்றில் 30 வருடங்களின் பின் அதிபர் ஒருவர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இந்த தோல்வி ட்ரம்புக்கு மட்டும் ஆச்சரியமளிக்கவில்லை. முழு உலகுக்கும் ஆச்சரியம்தான். ஆனால் அவருடைய தோல்வியின் பின்னால் உள்ள நேர்மையான அரசியலின் சக்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ட்ரம்பின் தோல்வி மற்றும் ஜோ பைடன் உடைய வெற்றியில் இருந்து தற்கால இனவெறி அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு செய்தி உள்ளது.

நெருக்கடிகளை உருவாக்கி, இனவெறியை விதைத்து, மக்களிடையே வெறுப்பையும் பிளவையும் பரப்புவதன் மூலம் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு ஆட்சியாளரையும் மக்கள் ஒரு நாள் தோல்வியடையச் செய்வார்கள்.

நெருக்கடிகள், இனவாதம், மதவாதம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது எளிது ஆனால் அவ்வாறு கைப்பற்றிய அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டு ஆட்சி செய்வது மிகக் கடினமானது. ட்ரம்புக்கு ஏற்பட்ட தோல்விக்கு அதுதான் காரணம்.

இனவாதம் சோறு போடாது என்பார்கள். ட்ரம்ப்பின் இனவாதம் அமெரிக்க மக்களுக்கு சோறு போடவில்லை. வாழ்க்கை செலவை அதிகரித்தது. பொருளாதாரத்தை மந்தமாக்கியது. இதற்கு மேலும் பொறுக்க முடியாது என மக்களை வீதிக்கு இறக்கியது. அதுதான் அவரின் கடைசித் தோல்விக்கும் காரணமாகியது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் நிலையே இப்படியென்றால் நம் இலங்கையின் நிலை என்னவாகும்? 

சிறுபான்மை மக்கள் மீது வெறுப்புத் தன்மையை உருவாக்கி பெரும்பான்மை வாக்காளர்களின் கூடிய ஆதரவைப் பெற்று பாதுகாப்பான நாட்டை உருவாக்குவோம் என்றெல்லாம் வீராப்பு பேசினாலும் இன்று மக்களின் வாழ்க்கைச் செலவு ஆகாயத்தை தொடுமளவுக்கு சென்று ஒரு ஜனாதிபதி ஐந்து முறை வர்த்தமானி அறிவித்தல் கொடுத்தும் கூட எந்தவொரு விலைக்குறைப்புமில்லாது நினைத்த விலையில் அத்தியவசிய பொருட்கள் கட்டுப்பாடுகளின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை மறைக்க ட்ரம்பின் பாணியில் அல்லது மோடியின் பாணியில் கொரோனா முஸ்லிம் இனவாதத்தை கையிலெடுத்துள்ளது இந்த அரசு.

முஸ்லீம் மக்கள் கொவிட்-19 வைரஸினால் இறந்தால் அல்லது இறந்ததன் பின்னர் PCR டெஸ்ட் மூலம் அவர்களை கொரோனா நோயாளிகள் என்று சொல்லி உலக நாட்டு நடைமுறைகளுக்கும் WHO அறிவுறுத்தல்களையும் மீறி பேரினவாதிகளை சந்தோஷப்படுத்த ஒரு அரசியல் நாடகத்தை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. 

இந்த நாடகம் முற்றுப்பெற வேண்டும். இல்லாவிட்டால் வெகுவிரைவில் இவர்களும் அமெரிக்க முன்னால் அதிபர் போல் ஆவார்கள் என்பதில் ஐயமில்லை. பெரும்பான்மை மக்களின் ஆதரவு இனவாதத்தை வைத்து மட்டும் எப்போதும் கிடைக்காது. நாட்டின் நல்லாட்சியே நிறந்தர வெற்றியை தரும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னால் உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment