கொரோனா நோய்த் தொற்று நிலைமையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை ஐந்து விமானங்கள் மூலம் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நவம்பர் 18 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதுடன் நவம்பர் 20 ஆம் திகதி இத்தாலியிலிருந்து 100 இலங்கையர்கள் திருப்பி அழைத்துவரப்படவுள்ளனர்.
அத்துடன், 297 இலங்கையர்கள் நவம்பர் 21 ஆம் திகதி கட்டாரிலிருந்து அழைத்து வரப்படவுள்ளதுடன் மேலும் 297 இலங்கையர்கள் நவம்பர் 23 ஆம் திகதி குவைத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
நவம்பர் 26 ஆம் திகதி 290 இலங்கையர்கள் ஓமானில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் வெளிநாட்டு அமைச்சின் கிழக்கு ஆசியாவுக்கான பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட அனுமதியின் அடிப்படையில் டுபாயில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அடுத்தவாரமளவில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment