(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகார எல்லைக்கு உற்பட்ட ஏழு இலட்சம் ஏக்கர் காணிகளை அரசாங்கம் அபகரித்து பிரதேச, மாவட்ட செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சி சபையில் குற்றம் சுமத்தியது. எனினும் அவ்வாறான எந்தவொரு காணியும் அபகரிக்கவில்லை எனவும் ஒரு சில பகுதிகளை நகர மயமாக்களுக்காக அடையலாப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல இது குறித்து கூறுகையில், வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமாக வனப்பகுதிகளில் ஏழு இலட்சம் ஏக்கர் நிலம் அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த பகுதியை கையாள பிரதேச செயலகங்களுக்கும், மாவட்ட செயலகங்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
காடுகளை பாதுகாக்க வேண்டும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என ஒருபுறம் ஜனாதிபதி கூறிக்கொண்டு இவ்வாறு காடுகளை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை சாதாரண விடயமாக கருத முடியாது என்றார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்து பதிலளித்த அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கூறுகையில், அவ்வாறு எந்தவொரு காடும் அழிக்கப்படவில்லை. முன்னைய ஆட்சியில்தான் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றது, நாம் அவ்வாறு ஏழு இலட்சம் ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாக கூறுவதை அரசாங்கம் என்ற ரீதியில் முழுமையாக நிராகரிக்கிறோம்.
அதேபோல் நகரமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ஒரு சில பகுதிகள் அடையலாம் காணப்பட்டுள்ளன. அதேபோல் கிழக்கில் அதிகளவான காணிகள் புண்ணிய பூமியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாக்கவும், அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment