(செ.தேன்மொழி)
அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும்போது அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை போன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் இரண்டாவது தடவை ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போகும் நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் ஆட்சியமைத்து ஒரு வருட காலம் பூர்த்தியாகும் தருணத்தில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து நூறு நாட்களுக்குள் செய்த காரியங்களைக்கூட, இவர்கள் இதுவரையில் செய்யவில்லை.
தற்போது பாரிய சுகாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பில் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளதாக தெரியவில்லை.
ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் இத்தகைய நெருக்கடி நிலையை ஏற்பட்டிருக்காத போதிலும் அப்போதய சுகாதார அமைச்சராக செயற்பட்ட ராஜித சேனாரத்ன 48 ஔடதங்களின் விற்பனை விலைகளை குறைத்திருந்தார்.
சுவசெரிய அம்பயூலன்ஸ் சேவைக்கும் மக்கள் தற்போது நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த காலப்பகுதியில் இதனூடாக மக்கள் பெரிதும் நன்மைகளை பெற்றுக் கொள்கின்றனர். இத்தகைய ஏதாவது ஒரு செயற்பாட்டை அரசாங்கம் செய்துள்ளதா? தற்பொது அரிசி, மரக்கறி உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள கொரோனா நிதியத்தக்கு இதுவரையில் எவ்வளவு நிதி கிடைக்கப் பெற்றுள்ளது? அதில் எவ்வளவு தொகை இதுவரையில் செலவிடப்பட்டுள்ளது ? என்பது தொடர்பில் தெரிவிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மத்தியில் தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களுத்தவர்கள் கூட, தாங்களும் அவரது வெற்றிக்கு காரணம் என்பதை கூறிக் கொள்ள விரும்பாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment