பொருளாதார இழப்பை சீர்செய்ய வேண்டி இருப்பதால், மலையேற்றம் உள்ளிட்ட சாகச பயணங்களுக்கு நேபாள அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
நேபாளத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எவரெஸ்ட் உள்ளிட்ட 8 மலைச் சிகரங்களில் ஏறவும், சாகச பயணங்களை மேற்கொள்ளவும் அந்நாட்டு அரசு கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது.
இதனால் அங்கு சுற்றுலாத் துறையில் கடும் சரிவு ஏற்பட்டது. அந்த துறையை சேர்ந்த 8 லட்சம் பேர் வருவாய் இழந்தனர். மேலும் நேபாளத்தில் பொருளாதாரமும், கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் பொருளாதார இழப்பை சீர்செய்ய வேண்டி இருப்பதால், மலையேற்றம் உள்ளிட்ட சாகச பயணங்களுக்கு நேபாள அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து நேபாளச் சுற்றுலாத்துறை இயக்குனர் ருத்ரசிங் தமாங் கூறும்போது, சுற்றுலாத் துறையின் வருவாய் பாதிப்பை கருத்தில் கொண்டு சிகரங்கள் மற்றும் மலையேற்ற சாகச பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மலை ஏற அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. முன்னதாகவே விண்ணப்பிக்கும் வெளி நாட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்கள் தங்கள் நாட்டில் இருந்து புறப்படும் முன் கொரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழுடன் வர வேண்டும்.
பின்னர் நேபாளத்தில் ஒரு வாரம் ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த பின்னர் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment