அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளதோடு அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடன் (Joe Biden) களமிறங்கியுள்ளார்.
ட்ரம்ப், ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாநிலங்கள் தபால் மூல வாக்கெடுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சுமார் 6 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மசாசுசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் வாக்குச்சீட்டு போடும் பெட்டியில் தீப்பிடித்துக் கொண்டது. அங்குள்ள பொது நூலகத்துக்கு வெளியே இப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, பெட்டியில், 122 வாக்குச் சீட்டுகள் இருந்தன. அவற்றில் 87 சீட்டுகள் தீயில் கருகவில்லை.
இது, திட்டமிட்ட தாக்குதலாக இருக்கும் என்று மாகாண தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, எப்.பி.ஐ. விசாரணை நடத்த கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், தீயில் சேதமடைந்த வாக்குச் சீட்டுகளுக்கு பதிலாக, சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் நேரில் வந்து வாக்களிக்கலாம் அல்லது அவர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்காளர்கள் புதிய சீட்டை சமர்ப்பிக்காவிட்டால், சேதமடைந்த சீட்டுகளே முடிந்தவரை எண்ணப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment