ஒரு ஊரிலிருந்து திருடிய மோட்டார் சைக்கிளில் பயணித்து இன்னொரு ஊரிலுள்ள முச்சக்கர வண்டியைத் திருடிக்கொண்ட திருடன் மாயம் - தன்னாமுனையிலும், ஏறாவூரிலும் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

ஒரு ஊரிலிருந்து திருடிய மோட்டார் சைக்கிளில் பயணித்து இன்னொரு ஊரிலுள்ள முச்சக்கர வண்டியைத் திருடிக்கொண்ட திருடன் மாயம் - தன்னாமுனையிலும், ஏறாவூரிலும் சம்பவம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இரு வேறு மோட்டார் வாகனத் திருட்டுச் சம்பவங்களை ஒரே இரவில் செய்த நபரைத் தேடும் பணியில் தாம் ஈடுபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை 12.10.2020 அதிகாலை இடம்பெற்றுள்ள இந்த இரு வேறு மோட்டார் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பற்றி மேலும் தெரியவருவதாவது,

திருட்டு நபர் முன்னதாக 6 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தன்னாமுனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடிக் கொண்டு அதில் பயணம் செய்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஏறாவூர் பள்ளியடி முதலாம் குறுக்கு வீதிக்கு வந்து சேர்ந்துள்ளான்.

திருடிக் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தி வைத்து விட்டு அவ்விடத்தில் வீதி மருங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கைகளால் தள்ளிக் கொண்டு சென்று ஏறாவூர் பெண் சந்தை வீதிக்கு வந்தவுடன் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றிருக்கிறான்.

இந்தக் காட்சிகள் அக்கம்பக்கத்திலுள்ள காணொளிக் கமெராவில் பதிவாகியிருப்பதைப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இதேவேளை முச்சக்கர வண்டியைத் திருடும் பொழுது திருடன் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி வரை அதே இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

இதுபற்றி பொலிஸாருக்கு அறிவித்ததும் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றினர்.

இதேவேளை தன்னாமுனையில் தனது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ளது பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள அதன் உரிமையாளரும் தனது மோட்டார் சைக்கிள் இதுதான் என அடையாளம் காட்டியுள்ளார்.

இச்சம்பவங்கள் பற்றி மேலதிக துப்புத் தகவல்களைத் திரட்டிக் கொண்டு சம்பந்தப்பட்ட திருடனைத் தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment