மக்களின் தூக்கம், உணவுப் பழக்கம், உடல் பருமன், மனநலத்தை பாதித்த கொரோனா ஊரடங்கு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 24, 2020

மக்களின் தூக்கம், உணவுப் பழக்கம், உடல் பருமன், மனநலத்தை பாதித்த கொரோனா ஊரடங்கு

கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு மக்களின் தூக்கம், உணவுப் பழக்கம் போன்றவற்றை மாற்றியமைத்திருப்பதுடன், உடல் பருமனையும் அதிகரித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

சீனாவின் வுகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அனைத்து நாடுகளுக்கும் பரவி மக்களை கொத்து கொத்தாக பலி கொண்டு வந்தது. 

தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் வேகமாக பரவிய கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஒரே வழியாக வீட்டிலேயே முடங்குதல் என்ற ஒன்றே சிறந்த வழியாக அரசுகளுக்கு பட்டது.

எனவே கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் உலகின் பல நாடுகள் ஊரடங்கு எனும் பொது முடக்கத்தை அமுல்படுத்த தொடங்கின. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் நாடுகளும் கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்ள இத்தகைய பொது முடக்கத்தை நோக்கியே மக்களை திருப்பி விட்டன.

வாழ்நாளில் முதல் முறையாக எதிர்கொண்ட இந்த சர்வதேச முடக்கம் முதலில் மக்களுக்கு அசவுகரியங்களை கொடுத்தாலும், பின்னர் அதற்கேற்ப வாழ தங்களை அவர்கள் தகவமைத்துக் கொண்டனர். தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் காக்கும் பொருட்டு வீடுகளில் முடங்குவதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

மாதக்கணக்கில் நீண்ட இந்த ஊரடங்கு அவர்களுக்கு புதிய பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்து உள்ளது. மக்களின் வழக்கமான இயங்குதலில் இது ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.

அந்த வகையில் இந்த ஊரடங்கால் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் மக்களிடம் ஆய்வு நடத்தினர். 

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து மற்றும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 7,754 பேரிடம் ஆய்வு நடத்தி, ‘ஒபீசிட்டி’ என்ற மருத்துவ இதழில் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளனர்.

உலக அளவில் ஆயிரக்கணக்கான மக்களிடம் அவர்களது வாழ்க்கை முறை மாற்றம் குறித்து முதல் முதலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி, வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவுகள் மக்களுக்கு நேர்மறையான ஆரோக்கியத்தை கொடுத்திருக்கின்றன. ஆரோக்கியமான உணவு பழக்கம் அதிகரித்து இருக்கிறது. குறைந்த அளவில் அடிக்கடி உண்பதால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் அதிக நொறுக்குத்தீனி, குறைவான உடற்பயிற்சி, தாமதமாக படுக்கைக்கு செல்தல், குறைவான தூக்கம், கவலைகள் இரட்டிப்பு போன்றவற்றுக்கு இந்த ஊரடங்கு காரணமாகி இருக்கிறது.

உடல் பருமன் கொண்டவர்களை பொறுத்தவரை இந்த ஊரடங்கு நாட்களில் அவர்களுக்கு மேலும் எடை அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர்.

உடல் பருமன் கொண்டவர்கள் தங்கள் உணவு கட்டுப்பாட்டை மேலும் அதிகரித்து இருக்கிறார்கள். அதேநேரம் அவர்களது மனநலம் வெகுவாக பாதிக்கப்பட்டு எடை அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த ஊரடங்கு நாட்கள் உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்களை மக்களுக்கு கொண்டு சேர்த்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment