பழுதடைந்தது பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் : சீனாவிலிருந்து தொழிநுட்பவியலாளர் வருகை - இராணுவ தளபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

பழுதடைந்தது பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் : சீனாவிலிருந்து தொழிநுட்பவியலாளர் வருகை - இராணுவ தளபதி

(எம்.மனோசித்ரா)

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தோரின் சடலங்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதன் முடிவுகள் கிடைத்த பின்னரே மரணத்திற்கான காரணி குறித்து உறுதிப்படுத்த முடியும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

தற்போதுள்ள நிலைமையில் இவ்வாறான உயிரிழப்புக்கள் பதிவாகினாலும் பிரேத பரிசோதனையுடன் பி.சி.ஆர். பரிசோதனையும் முன்னெடுக்கப்படும். அதன் முடிவு கிடைத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

நாட்டிலுள்ள பிரதான பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் பழுதடைந்துள்ளதாகவும் அதனைத் திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழிநுட்பவியலாளர் ஒருவர் இன்று நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளித்த இராணுத் தளபதி, பிரதான பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் பழுதடைந்துள்ளது. அதனை திருத்துவதற்கு தொழிநுட்பவியலாளர்கள் முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை. கடந்த 20 நாட்களாக தொடர்ச்சியாக பாவனைக்குட்படுத்தப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே சீனாவிலிருந்து தொழிநுட்பவியலாளர் ஒருவரை வரவழைத்து குறித்த இயந்திரத்தை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அவர் இன்று நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி இயந்திர திருத்த பணிகள் முன்னெடுக்கப்படும்.

குறித்த இயந்திர பழுதின் காரணமாகவே 2 - 3 நாட்கள் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேரடியாக அவதானம் செலுத்தியதோடு இதற்கு துரிதமாக தீர்வினைக் காணுமாறு பணிப்புரை விடுத்தார் என்றார்.

மேல் மாகாணம் முடக்கப்பட்டுள்ளமை குறித்து தெரிவித்த அவர், மொரட்டுவையில் ஆரம்பத்தில் 42 தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதிலும் குறித்த பி.சி.ஆர். இயந்திர கோளாரின் காரணமாக இரு தினங்களுக்கு முன்னரே இந்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டது. அதற்கமையவே உடன் அமுலாகும் வகையில் பாணந்துரை மற்றும் ஹோமாகவிற்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இவை தவிர கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறையிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். கொழும்பில் பெருமளவான நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் காணப்பட்டாலும் கம்பஹாவிலிருந்தே அதிகளவானோர் தொழிலுக்க வருகின்றனர். 

எனவே கொழும்பிலிருந்து வேறு இடங்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாகவுள்ளது. இவ் அனைத்தையும் கவனத்தில் கொண்டு போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காகவே மேல் மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை ஆரம்பத்தில் காணப்பட்டதைப் போன்றல்லாமல் தற்போது வைரஸ் பரவும் வேகம் அதிகமாகவுள்ளது. எனவே மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் கந்தக்காடு ஆகிய கொத்தனிகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

No comments:

Post a Comment