மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) முதல் மீண்டும் வழமைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி முதல், நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர மற்றும் கம்பஹாவிலுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) முதல் சேவைகள் வழமைக்கு வருவதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் சி.கே. அளககோன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இலக்கங்களை தொடர்பு கொண்டு சேவைகளைப் பெறுவதற்கான முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாகன உரிமை மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்களை, அந்தந்த பிரதேச செயலகங்களில் ஒப்படைப்பதற்கான வசதிகள் காணப்படுவதால், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் திணைக்களத்தின் பிரதான அலுவலுகத்திற்கு வருமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வேரஹெர அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சாரதி அனமதிப்பத்திரம் வழங்கும் ஒரு நாள் சேவையானது, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் வசிக்கின்ற மற்றும் கொழும்பில் கடமையாற்றுவோருக்கு மாத்திரம், வேரஹெரவில் சாதாரண சேவையில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு குறித்த நபர் தனது வசிப்பிடத்தை உறுதிப்படுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment