ஜோ பைடனுடன் வரும் 15ம் திகதி நடைபெற உள்ள காணொலி காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3ம் திகதி நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையேயான முதல் நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் 29ம் திகதி ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்றது.
இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்று சில நாட்களில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டத்தையடுத்து வெள்ளை மாளிகையில் தனது பணிகளை தொடர்ந்து வருகிறார். ஆனால், அவர் இன்னும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையவில்லை.
இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான 2வது நேரடி விவாத நிகழ்ச்சி புளோரிடா மாகாணத்தில் நடந்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி ட்ரம்பிற்கு கொரோனா உறுதியானதையடுத்து விவாதம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, ஜனாதிபதி வேட்பாளர்களான ட்ரம்ப் மற்றும் பைடன் இடையே வரும் 15ம் திகதி நடைபெற உள்ள நேரடி விவாத நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெறும் என ஜனாதிபதி தேர்தலுக்கான விவாத ஒருங்கிணைப்பு கமிஷன் நேற்று தெரிவித்தது.
பங்கேற்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜோ பைடனுடன் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ள 2வது நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் தான் பங்கேற்கப் போவதில்லை என ஜனாதிபதி ட்ரம்ப் இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ட்ரம்ப், ’காணொலி காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. நேரடி விவாதம் என்பது காணொலி காட்சி மூலம் நடத்தப்படுவதல்ல’ என தெரிவித்தார்.
முன்னதாக, டொனால்ட் ட்ரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையவில்லை என்றால் அவருடன் நேரடி விவாத்தில் ஈடுபடமாட்டேன் என்று ஜனநாயக கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment