கொலையாளிக்கு விடுதலை வழங்க கோரிய மகஜரில் கையொப்பமிட்டு உங்களுக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கை மீது காறி உமிழ்ந்துள்ளீர்கள் : நஸீர் அஹமட் எம்.பிக்கு கல்முனையிலிருந்து பகிரங்க மடல் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

கொலையாளிக்கு விடுதலை வழங்க கோரிய மகஜரில் கையொப்பமிட்டு உங்களுக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கை மீது காறி உமிழ்ந்துள்ளீர்கள் : நஸீர் அஹமட் எம்.பிக்கு கல்முனையிலிருந்து பகிரங்க மடல்

நூருள் ஹுதா உமர்

கொலைக் குற்றவாளி ஆர். துமிந்த சில்வாவை விடுதலை செய்ய கோரி மகஜரில் கையெழுத்திட்ட மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பீ.எம். சிபான் பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில் கொரோனா ஜனாஸாக்களின் எரிப்புக்கு எதிரான குரலாக, பள்ளி உடைப்புகளுக்கு எதிரான குரலாக, உங்கள் உம்மத்தின் உரிமைக் குரலாக, பாராளுமன்றத்தில் உங்களுடைய குரல் ஒலிக்கும் என்று எதிர்பார்த்து வாக்களித்த மக்களின் நம்பிக்கை மீது நீங்கள் காறி உமிழ்ந்துள்ளீர்கள். கொலையாளிக்கு விடுதலை வழங்க கோரி மகஜரில் கையொப்பமிட்டதன் பின்னணி என்ன? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அப்பகிரங்க மடலில் மேலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இருப்பை உறுதிப்படுத்த மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் உருவாக்கிய மரச் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற ஒரே ஒருவர் ஹாபிஸ் நசீர் அஹமட் மாத்திரமே.

மறைந்த மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் நன்மதிப்பு வைத்திருந்த மனிதர்களுள் நீங்களும் ஒருவராக இருந்தீர்கள் என அறிந்தோம். ஆனால் மறைந்த மாமனிதரின் கொள்கையில் ஒரு துளி அளவேனும் இல்லாத வகையில் நீங்கள் நடந்து கொள்வது கண்டு மன வேதனை அடைகின்றோம்.

கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையொப்பமிட்ட சஜித் அணியினரின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஹாபிஸ் நசீர் அஹமட்டும் ஒருவராக இருப்பது கண்டு வியப்படைகின்றோம்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கான தனது கையெழுத்தை மீள பெற்றிருக்கின்ற இவ்வேளையிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏக பிரதிநிதி ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களிடமிருந்து அவ்வாறானதொரு செய்தி இதுவரை வராமை கண்டு ஆச்சரியம் அடைகின்றோம்.

மரச் சின்னத்தை வேலியாய் பூண்டு அதிகார கதிரையையை தனதாக்கி முதலமைச்சராக இருந்தபோது மஹிந்த தரப்பும் நீங்களும் பேணி வந்த கள்ளத்தொடர்பு தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. அதனுடைய வெளிப்பாடாகவே உங்களுடைய 20 ஆவது திருத்தத்திற்கான ஆதரவினையும் துமிந்த சில்வாவுக்கான கையெழுத்தையும் காண்கின்றோம்.

முன்னாள் முதலமைச்சர் அவர்களே, பதவிக்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் பெரும்பான்மை கடற்படை அதிகாரி ஒருவருடன் மோதிக் கொண்டமை நாடறிந்த விடயமாகும். உங்கள் மோதலினை நாளொரு பிரேக்கிங் நியூஸ் ஆக உலகுக்கு அம்பலப்படுத்தி இனவாதத்தை எரியூட்டி கொண்டிருந்தது ஹிரு டீவி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் பெரும்பான்மையின மக்களினால் சமூக ஊடகங்களிலும் பரவலாக தாக்கப்பட்டு வருவதை விட்டுக் கொடுக்காத முஸ்லிம் இளைஞர்கள் இந்த நாடு பூராகவும் இருந்து நியாய அநியாயங்களுக்கு அப்பால் கண்மூடித்தனமாக உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள்.

ஆகவேதான் ஹிரு டீவி குழுமத்தின் பணிப்பாளர்களில் ஒருவரை நீங்கள் விடுதலை பண்ணக்கோரி கையெழுத்திட்டுரிப்பதானது உங்களை ஆதரித்துக் குரல் கொடுத்த ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் நீங்கள் செய்யும் துரோகமாகும்.

கொரோனா ஜனாஸாக்களின் எரிப்புக்கு எதிரான குரலாக, பள்ளி உடைப்புகளுக்கு எதிரான குரலாக, உங்கள் உம்மத்தின் உரிமைக் குரலாக, பாராளுமன்றத்திலே உங்களுடைய குரல் ஒலிக்கும் என்று எதிர்பார்த்து வாக்களித்த மக்களின் நம்பிக்கை மீது நீங்கள் காறி உமிழ்ந்துள்ளீர்கள்.

உங்களுடைய இந்தக் கையொப்பத்தின் துவக்கம் எதிர்காலத்தில் முஸ்லிம்ளை பகிரங்கமாக தாக்குகின்ற அல்லது முஸ்லிம் பள்ளிகளை சேதப்படுத்துகின்றன சிறைக் குற்றவாளிகளுக்களையும் வெளியில் கொண்டு வருவதற்ககு அடித்தளமாக இருக்குமோ என்ற அச்சம் எங்களை குடி கொள்கின்றது .

ஆகவே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே, மறைந்த மாமனிதரின் பெயர் தாங்கிய கட்சியிலே ஏக பிரதிநிதியாக இருந்து கொண்டு கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவின் விடுதலைக்கு ஆதரவான கையொப்பத்தை மீளப்பெறுங்கள். அல்லது நீங்கள் கையொப்பமிட்ட காரணத்தினை பகிரங்கப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என அந்த பகிரங்க கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment