பாறுக் ஷிஹான்
துரோகிகள் என சுமந்திரன் என்பவர் அறிக்கை விடுகின்றார். நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளையா? எனக் கேட்க விரும்புகின்றேன் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம் ஹரீஸ் குறிப்பிட்டார்.
20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் தன்னிலை விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (25) கல்முனையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை எம்மிலிருந்து பறிக்க முற்பட்டது. வடகிழக்கிலுள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசாங்கம் சர்வதேசத்துடன் நல்லுறவினைப் பேணி வருகின்றனர்.
ஆனால், எமது மக்களுக்காக நாம் ஒரு நடவடிக்கை எடுக்கின்ற போது, கூட்டமைப்பானது அரசாங்கத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்கின்றனர். அல்லாவிடின், நீங்கள் துரோகிகள் என சுமந்திரன் என்பவர் அறிக்கை விடுகின்றார். நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளையா? இவர்கள் வடகிழக்கினை இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இவ்வாறாயின், எமது சமூகம் கடலில் கொண்டு போய் விழுவதா? எனக்கேட்க விரும்புகின்றேன். நாங்கள் 20 வருடங்கள் அனுபவமுள்ளவர்கள். உலக அரசியல் ஞானமுள்ளவர்கள் பூலோக அரசியலையும் படித்துக் கொண்டிருப்பவர்கள்.
சிலருக்கு கல்முனை பறி போவதனால் எனது அரசியல் முடிவு பெறுமென நினைக்கின்றனர். அவ்வாறு அவர்களது மனநிலை உள்ளது. ஒரு சமூகத்தை அழித்து தங்கள் குறிக்கோளை அடைய முற்படவும் முயற்சிக்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment