ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளராக இருந்து இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக எச்.எம்.எம்.றியாழ் தெரிவு செய்யப்பட்டமை மிகவும் சந்தோசமளிப்பதாக சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (01) இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் "டங்கள் வைட்" கேட்போர் கூடத்தில் (Duncan White Auditorium) நடைபெற்ற இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளன நிருவாகத்தெரிவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் இயக்குனருமான எச்.எம்.எம்.றியாழ் உப தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தனது சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக கருத்து வெளியிடும்போதே சட்டத்தரணி ஹபீப் றிபான் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட றியாழுக்கு மென்மேலும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன், கல்குடாத் தொகுதியில் இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் மிகவும் திறமையும் ஆர்வமும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.
அவ்வாறான இளைஞர்கள் தேசிய ரீதியில் இடம்பிடிப்பதற்கும், அவர்களை வழிகாட்டுவதற்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான கரப்பந்தாட்ட மைதானம் அமையப்பெற வேண்டிய தேவைப்பாடு உள்ளதுடன், சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட வேண்டிய தேவைப்பாடும் உள்ளது.
இவ்வாறான இளைஞர்கள் சார்ந்த விடயங்களுக்கு கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் இயக்குனருமான எச்.எம்.எம்.றியாழின் பங்களிப்பு எதிர்காலத்தில் கிடைக்குமென நம்புவதாகவும் சட்டத்தரணி ஹபீப் றிபான் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment