பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட புயலால் 9 பேர் பலி - மின் வினியோகம், தகவல் தொடர்பு சேவைகள் முடக்கம் - 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட புயலால் 9 பேர் பலி - மின் வினியோகம், தகவல் தொடர்பு சேவைகள் முடக்கம் - 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டி போட்ட சக்தி வாய்ந்த புயல் காரணமாக 9 பேர் பலியாகினர்.

பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தோனேசியாவுக்கு பிறகு அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட இரண்டாவது நாடாக பிலிப்பைன்ஸ் உள்ளது. 

இங்கு இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 180 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் 7 ஆயிரத்து 114 பேரை பலி கொண்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ‘மோலேவ்’ என்கின்ற சக்தி வாய்ந்த புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியது. அந்த நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கலாபார்ஷன், மிமரோபா, விசயாஸ் ஆகிய பிராந்தியங்களை இந்த புயல் புரட்டிப் போட்டுவிட்டது.

மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் தொடங்கி 160 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. 

புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் பல காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் மூழ்கின.

புயலைத் தொடர்ந்து கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 

100 க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. 

அதேபோல் புயல் காரணமாக மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. தகவல் தொடர்பு சேவையும் முடங்கி உள்ளது.

மேலும் புயலை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் நாசமாயின.

இந்த புயல் காரணமாக ஏறத்தாழ 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ‘மோலேவ்’ புயல் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் மாயமாகியுள்ளதாகவும் நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்த புயல் வியட்நாம் வழியாக தென் சீனக் கடல் நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் 20 புயல் வரை தாக்கும் என்பதும் இது இந்த ஆண்டு பிலிப்பைன்சை தாக்கிய 17 அவது புயல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment