ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கம்பஹா மாவட்டத்திலிருந்து கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட 82 தொற்றாளர்கள் வியாழக்கிழமை 08.10.2020 காலை வரை சிக்சிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக பிரதேச மக்களின் வழமையான சிகிச்சைகளுக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை புதன்கிழமை மாலையிலிருந்து பூட்டப்பட்டுள்ளது.
தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் விஷேட கொரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அனைவரும் பெண்கள் என்றும் அவர்கள் கம்பஹா மாவட்டத்திலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் நாட்டின் நாலாபுறங்களையும் வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்சமயம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை விஷேட கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளதால் வழமையாக வைத்திய சேவைகளை நாடும் பிரதேச மக்கள் அருகிலுள்ள ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையை அல்லது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அணுக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் முதலாம் அலை பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு இலங்கையின் நாலாபுறங்களிலுமிருந்தும் கொண்டு வரப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் விஷேட கொரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment