(இராஜதுரை ஹஷான்)
அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பினை மேற்கொள்வது அவசியமற்றது. மக்கள் வாக்கெடுப்புக்கு செல்லாத விடயங்களே திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு அரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தை எதிர்க்கும் முயற்சிகளை எதிர்தரப்பினர் முன்னெடுத்து வருகிறார்கள். அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள முடியும் என சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஜனாதிபதி சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதாக எதிர்தரப்பினர் மாத்திரமே குற்றச் சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் ஆட்சியை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது. மக்கள் வாக்கெடுப்புக்கு செல்வதற்கான எவ்வித ஏற்பாடுகளும் திருத்தத்தில் இல்லை.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவினர் தயாரித்த முதற்கட்ட சட்டமூல வரைபை சட்டமா அதிபர் முழுமையாக பரிசீலனை செய்தார். 20 ஆவது திருத்தத்தில் பாரதூரமான விடயங்கள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை. இல்லாத விடயத்தை சுட்டிக்காட்டி எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.
வர்த்தமானியில் வெளியிட்டப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் அரச நிர்வாகத்தை பலப்படுத்தும் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டுள்ளார்கள்.
பாராளுமன்றில் ஆளும் தரப்பினருக்கு பெரும்பான்மை ஆதரவு உண்டு 20 ஆவது அரசியமைப்பு திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படும். சுட்டிக்காட்டப்படும் குறைபாடுள் பாராளுமன்ற குழுவின் ஊடாக திருத்தம் செய்யப்படும் என்பதில் உறுதியாக உள்ளோம். என்றார்.
No comments:
Post a Comment