STF இற்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட இருவர் கைது - மட்டக்களப்பில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 17, 2020

STF இற்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட இருவர் கைது - மட்டக்களப்பில் சம்பவம்

சட்டவிரோதமான சுருக்குவலையை கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினருக்கு (STF) 40 ஆயிரம் ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட இருவர் கைதாகியுள்ளனர்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் எல்லைக்குட்பட்ட கடற்கரையோரங்களில் அண்மைக்காலமாக சுருக்குவலை பயன்பாடு அதிகரித்துள்ளதாக மீனவர்களின் குற்றச்சாட்டுகளை அடுத்து, விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.எம்.யு.கே.வி தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் நேற்று (17) இரவு குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.

இதன்போது, கடற்பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஒருதொகுதி சுருக்குவலைகளை மீட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், குறித்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கைதான இடத்தில் வைத்து குறித்த விசேட அதிரடிப்படையின் தலைமை அதிகாரிக்கு தனது உறவினர் ஊடாக 40 ஆயிரம் ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த இலஞ்சம் வழங்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட நபர் உள்ளடங்கலாக இரு சந்தேக நபர்களும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இவ்வாறு கைதான இரு சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் பிரதேசத்திற்கு பொறுப்பான கடற்றொழில் பரிசோதகர் குழுவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், கைப்பற்றப்பட்ட சுருக்குவலை தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சுருக்குவலை சுமார் பல இலட்சம் ரூபா பெறுமதியானது எனவும், அவற்றை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் கடற்பிராந்தியத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதியற்ற சுருக்குவலைகளை சிலர் பயன்படுத்துவதாகவும், அவற்றை தடை செய்யுமாறு கோரியும், கரைவலை மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை, தேத்தாத்தீவு,களுவாஞ்சிக்குடி, செட்டிபாளையம் உள்ளிட்ட கடற்பிராந்தியங்களில் சட்டவிரோதமான முறையில் சிலரால் சுருக்குவலை அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது.

தினகரன்

No comments:

Post a Comment